
கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி, கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர், பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த அவர், விஜய் நடித்த பத்ரி படத்தில், விஜய்க்கு பயிற்சி வழங்கும் ஆசிரியராக நடித்ததன் மூலம் பெரும் பிரபலமடைந்தார். மேலும், 400க்கும் அதிகமான வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி வழங்கி, தமிழகத்தில் நவீன வில்வித்தையின் முன்னோடியாக இருந்தார்.
சமீபத்தில், தனது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக ஊடகங்கள் மூலம் தகவல் வெளியிட்ட அவர், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதையும் பகிர்ந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மருத்துவச் செலவுக்காக வழங்கப்பட்டது.
உடல்நிலை குறித்து வெளியிட்ட வீடியோவில், “நான் மரணமான பின்னர் மூன்று நாட்களுக்குள், மருத்துவம் மற்றும் உடற்கூறாய்வு ஆராய்ச்சிக்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு உடலை தானம் செய்ய விரும்புகிறேன். இந்தக் கல்லூரியின் நிறுவனர், ஸ்ரீ ராமசாமி, என் இந்திய கராத்தே சங்கத்தின் தலைவராக இருந்ததுடன், என் ‘ஸ்னேக் பைட்’ உலகச் சாதனை முயற்சிக்கும் தலைமை தாங்கியவர்.”
இந் நிலையில், சிகிச்சை பலனின்றி அதிகாலை (மார்ச் 25) 1.45 மணியளவில் உயிரிழந்தார். 22 நாட்களாக அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். அவரது மரணத்தை அறிந்த திரையுலகத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர். முன்னதாக, ஷிஹான் ஹூசைனி தமது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருந்தார்.