
சீனாவில் உள்ள மருத்துவர்கள் புதன்கிழமை (மார்ச் 26) முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் கல்லீரலை மூளைச்சாவு அடைந்த மனிதனுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறினர். இடமாற்றம் செய்யப்பட்ட கல்லீரல் சோதனையின் நேரம் முழுவதும் சரியாக செயல்பட்டது, நிராகரிப்புக்கான எந்த அறிகுறிகளும் இல்லை.
ஆறு திருத்தப்பட்ட மரபணுக்களைக் (six edited genes) கொண்ட ஒரு சிறிய பன்றியின் கல்லீரல், மூளைச் சாவு அடைந்த ஒருவருக்கு மாற்றம் செய்யப்பட்டது, அவருடைய பெயர் மற்றும் அடையாளம் வெளியிடப்படவில்லை. கல்லீரல் தானம் செய்வதற்கான தேவை ஏற்கனவே மிக அதிகமாகவும், உலகம் முழுவதும் தொடர்ந்து தேவை வளர்ந்து வருவதாலும், இந்த முன்னேற்றம் எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் நம்பிக்கையை எழுப்பியுள்ளது. அவசரமாக உறுப்பு தேவைப்படுபவர்களுக்கும், நீண்ட காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கும் மரபணு திருத்தப்பட்ட பன்றிகள் உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது நம்புகின்றனர்.
சீனாவின் நான்காவது ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கை-ஷான் தாவோ, ஜாவோ-சூ யாங், சுவான் ஜாங் மற்றும் ஹாங்-தாவோ ஜாங் தலைமையிலான மருத்துவர்கள் குழு, மூளை மரணம் கண்டறியப்பட்ட ஒரு நோயாளிக்கு 10 நாட்களுக்கு கல்லீரல் அதன் அடிப்படை செயல்பாடுகளைச் செய்ததாகக் கூறியது.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளில் பன்றியின் சிறுநீரகங்கள் அல்லது இதயங்களைப் மாற்று அறுவை சிகிச்சையில் பெற்ற பல உயிருள்ள நோயாளிகள் வாழ்கின்றனர். ஆனால் கல்லீரல் அல்ல. சிறுநீரகத்தை விட கல்லீரல் செயல்பாடுகள் சிக்கலானவை. எனவே, மாற்று அறுவை சிகிச்சை கடினம்.
“மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து மனிதனுக்கு கல்லீரல் ஜீனோட்ரான்ஸ்பிளான்டேஷன்” என்ற தலைப்பில் இந்த ஆய்வு மார்ச் 26, 2025 அன்று நேச்சர் இதழில் வெளியிடப்பட்டது. “இந்த ஆய்வில், எங்கள் மருத்துவமனை நெறிமுறைகள் குழுவின் கடுமையான மேற்பார்வையின் கீழ், ஆறு மரபணுக்கள் திருத்தப்பட்ட பன்றியின் கல்லீரலை மூளை இறந்த நபருக்கு ஜீனோட்ரான்ஸ்பிளான்ட் செய்தோம்” என்று தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை அதிகாரப்பூர்வமாக மார்ச் 10, 2024 அன்று செய்யப்பட்டது. பெறுநரின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு 10 நாட்களுக்குப் பிறகு (மார்ச் 20, 2024) இந்த ஆய்வு செயற்கையாக நிறுத்தப்பட்டது. ஆனால் 10 நாட்களில், கல்லீரலின் இரத்த ஓட்டம், பித்த உற்பத்தி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பிற முக்கிய செயல்பாடுகளை மருத்துவர்கள் கண்காணித்தனர்.
பன்றி கல்லீரல் “மிகவும் நன்றாகச் செயல்பட்டது” மற்றும் “பித்தத்தை சீராக சுரத்தது” அத்துடன் முக்கிய புரதமான அல்புமினையும் உற்பத்தி செய்தது என்று சியான் மருத்துவமனையின் லின் வாங் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். எதிர்காலத்தில் கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு உதவக்கூடிய “இது ஒரு சிறந்த சாதனை” என்று அவர் மேலும் கூறினார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் பல்வேறு செயல்பாடுகளைச் செய்வதால் கடினமாக இருப்பதாக லின் கூறினார். அவை உடலின் இரத்தத்தை வடிகட்டுகின்றன, மருந்துகள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை உடைக்கின்றன, அதே போல் கழிவுகளை எடுத்துச் சென்று கொழுப்புகளை உடைக்கும் பித்தத்தையும் உருவாக்குகின்றன.
பன்றி கல்லீரல் மனித கல்லீரலை விட மிகக் குறைந்த அளவு பித்தம் மற்றும் அல்புமினை உற்பத்தி செய்கிறது என்று லின் கூறினார், மேலும் எதிர்காலத்தில் சிறந்த முடிவுகளுக்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை என்றும், ஏனெனில் மரபணு திருத்தப்பட்ட பன்றி கல்லீரலை உயிருள்ள மனிதனில் பரிசோதிக்க மருத்துவர்கள் இப்போது திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறினார்.