Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

செங்கடலில் அமெரிக்க போர் விமான விபத்து: விமானி காயம்!

செங்கடலில் அமெரிக்காவின் பல கோடி மதிப்புள்ள போர் விமானம் தவறி விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் விமானியில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க கடற்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் இரு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பணி நிர்வகித்து வருகின்றன. இவற்றில் ஒன்றாக ஹாரி ட்ரூமன் (USS Harry S. Truman) போர்க்கப்பல் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக, ஏமனில் இருக்கும் ஹவுதி (Houthi) படைகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்த கப்பல் ஈடுபட்டுள்ளது.

இந்த சூழலில், ஹாரி ட்ரூமன் போர்க்கப்பலில் இருந்து இயக்கப்பட்டு வந்த ஒரு எப்/எ18 இ (F/A-18E Super Hornet) மாடல் போர் விமானம், இயக்க தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் செங்கடலில் விழுந்துவிட்டது. போர் விமானத்துடன் அதை நகர்த்த பயன்படுத்தப்பட்ட டிராக்டர் வாகனமும் கடலில் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எப்/எ18 இ போர் விமானத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.570 கோடி ஆகும். விமானம் கடலில் விழுவதற்கு முன்பாகவே அதில் இருந்த விமானிகள் அவசர நேர நடவடிக்கையாக வெளியேறத் தொடங்கியதால், பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக தற்போது முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. கடலில் விழுந்த விமானத்தையும், அதனை நகர்த்திய டிராக்டரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதென்றும், மீட்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2021ஆம் ஆண்டிலும், ரூ.60 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள ஒரு அமெரிக்க போர் விமானம் விபத்தில் சிக்கிய நிகழ்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவ்வகை விபத்துகள் நிகழ்வது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.