
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 10ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. மார்ச் 12ம் தேதி, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ரூ.13,600 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து, பட்ஜெட்டின் மீதான விவாதம் நடைபெற்றது.
நிறைவு நாளான நேற்று, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் நாஜிம், அனிபால்கென்னடி, செந்தில்குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன், சுயேச்சை எம்.எல்.ஏ நேரு ஆகியோர் தனிநபர் தீர்மானங்களை முன்வைத்து பேசினர்.
மாநில அந்தஸ்துக்கான தொடர்ச்சியான முயற்சி
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என இதற்கு முன்பு 15 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டிருந்தாலும், இதுவரை கிடைக்கவில்லை. தற்போது, புதுச்சேரி மாநிலம் நிதிச்சுமை மற்றும் நிர்வாக அதிகாரம் இல்லாத சூழலில் உள்ளது. இதனால், பிற மாநிலங்களைப்போல் விரைவான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
2007ம் ஆண்டில் தனிக்கணக்கு முறையில் செயல்பட தொடங்கியபின், மத்திய அரசின் நிதி பங்களிப்பு குறைந்துகொண்டே வந்துள்ளது. 2017ல் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதன் பின்னர், புதுச்சேரி மாநிலம் சொந்த வருவாயில் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நிர்வாக விடுதலை தேவையானது என்பதையும், மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் சட்டசபை வலியுறுத்தியது.
தீர்மானம் நிறைவேற்றம்
சபாநாயகர் செல்வம், “மாநில அந்தஸ்து கிடைத்தால் புதுச்சேரிக்கு தனி தேர்வாணையம், நிதி கமிஷன் இடம் கிடைக்கும்” என்று குறிப்பிட்டு, எம்.எல்.ஏக்கள் தீர்மானத்தின் மீது பேசலாம் என அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து, எம்.எல்.ஏக்கள் தீர்மானத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தனர். முதல்வர் ரங்கசாமி, “மாநில அந்தஸ்து பெற அரசின் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. மக்கள் விருப்பத்திற்கேற்ப, இந்த தீர்மானத்தை மத்திய அரசிற்கு அனுப்பி வலியுறுத்துவோம்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏக்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானங்களை திரும்பப் பெற்றனர். அதன் பின்னர், மாநில அந்தஸ்து கோரும் அரசு தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் செல்வம், “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை இந்த சட்டசபை வலியுறுத்துகிறது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்” என அறிவித்தார். பின்னர், காலை 12:21 மணிக்கு சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே 15 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், 16வது முறையாக இதுவும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.