
தொழில்நுட்ப வளர்ச்சியின் புது பரிமாணமான செயற்கை நுண்ணறிவு (AI) நுட்பங்களை அரசு நிர்வாகத்தில் பின்பற்றும் வகையில், ஒடிஷா அரசு முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. மாநில அரசு துறைகளில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும், இனிமேல் மூன்று மாதங்கள் ஆன்லைன் ஏ.ஐ. பயிற்சியை கட்டாயமாக மேற்கொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம்,முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான பாஜக அரசின் ஒரு முன்னேற்றமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. புதிய தலைமுறையின் பணியாளர்களுக்கு தேவையான டிஜிட்டல் திறன்களை வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கம்.
இத்திட்டத்தை அறிவித்து, ஒடிஷா உள்துறைச் செயலர் மனோஜ் அஹுஜா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ கடிதத்தில், அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் உயர் அதிகாரிகள், தங்கள் கீழ் உள்ள பணியாளர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
அவர் மேலும் கூறியதாவது, “ஏ.ஐ. தொழில்நுட்பம் அரசு நிர்வாகத்தின் செயல்முறைகளில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் திறனுடையது. அதனைப் புரிந்து கொள்வதன் மூலம், பொதுமக்கள் சார்ந்த கொள்கைகளை மேம்படுத்த முடியும். சிறந்த மற்றும் தகவல் சார்ந்த முடிவுகள் எடுக்கப்படலாம்.”
அதிகாரிகள் ஏ.ஐ. பயிற்சியை பெறுவதன் மூலம், தகவல்களை விரைவாக புரிந்து, பெரிய அளவிலான தரவுகளை அலசும் திறன் வளர்க்க முடியும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம், எந்த துறை சார்ந்த சந்தேகங்களுக்கும் விரைவான மற்றும் தெளிவான பதில்களை பெற முடியும். சிக்கலான கொள்கை விஷயங்களை கூட எளிமையாக ஆராய்ந்து, பொதுமக்களுக்கு உகந்த முடிவுகளை எடுக்க முடியும். இவை அனைத்தும், எதிர்கால நிர்வாக சேவைகளை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இந்த பயிற்சிகள் அனைத்தும் இலவசமாக நம்பகமான இணைய தளங்களில் வழங்கப்படுகின்றன. அதிகாரிகள் அந்த பயிற்சிகளை மூன்று மாதங்களுக்குள் முடித்து, அதற்கான சான்றிதழை தங்களது துறை செயலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இன்றைய தினத்தில் இணையத்தில் தகவல்களை தேடுவது ஒரு வழக்கமான விஷயமாக மாறியுள்ள நிலையில், அதற்கு மேலும் பல்வேறு வசதிகளைச் சேர்த்துக் கொடுக்கிறது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
- தகவல்களை தரவாக கொடுத்து அதனை விரிவாக விளக்கி கேட்கலாம்.
- எந்தத் துறையை சேர்ந்த சந்தேகங்களுக்கும் சில வினாடிகளில் விளக்கம் கிடைக்கிறது.
- ஒரே நேரத்தில் பல்வேறு கோணங்களில் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் உதவுகிறது.
ஒடிஷா அரசு எடுத்துள்ள இந்த முடிவு, நவீன உலக நிர்வாகத்தில் முன்னேற விரும்பும் பிற மாநிலங்களுக்கு ஒரு மாதிரியாக விளங்கக்கூடியது. அரசு அதிகாரிகள், நிர்வாக சேவைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை அறிவாற்றலுடன் முன்னெடுக்க, இந்த AI பயிற்சி ஒரு முக்கிய அடித்தளமாக அமைக்கப்பட இருக்கிறது.