
ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், போலி கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது என மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாடு இணையவழி குற்ற தடுப்பு பிரிவு வெளியிட்ட அறிவிப்பில், “சைபர் குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். குறிப்பாக, போலி கடன் செயலிகள் மூலம், குறைந்த வட்டி, விரைவான ஒப்புதல் போன்ற ஆசை வார்த்தைகளால் மக்களை மோசடிக்கு உள்ளாக்கி வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் இத்தகைய செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது, தன்னுடைய எஸ்.எம்.எஸ்., தொடர்பு விவரங்கள் போன்ற தகவல்களுக்கு அனுமதி வழங்குகின்றனர். இதன் மூலம், அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, மிரட்டல் விடுக்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில், பயனாளர்களின் புகைப்படங்களை மாற்றி அமைத்து அவமானப்படுத்தும் விதத்தில் அவர்களின் நண்பர்களுக்கே அனுப்புகின்றனர். இதனால், பலரும் அதிர்ச்சி மற்றும் பயத்தில் முடங்கிவிடுகின்றனர்.
2024ஆம் ஆண்டு மட்டும், 9,873 புகார்கள் சைபர் குற்றப்பிரிவில் பெறப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டில் இதுவரை 3,834 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, சரிபார்ப்பின்றி எந்தக் கடன் செயலியையும் நம்ப வேண்டாம், அவற்றை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.