Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

திருப்பூரில் வங்க தேசத்தினர் 130 பேர் கைது! காவல்துறையின் வேட்டை தொடர்கிறது!

தொழிற்சாலைகளின் மையமாகத் திகழும் திருப்பூர், இன்று தொழிலாளர்களால் நிரம்பிய நகரமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களைத் தவிர, உத்தரபிரதேசம், பீஹார், ஒடிசா, மேற்குவங்கம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தவிர, வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களும் திருப்பூரில் தங்கியுள்ளனர்.

தொழிலாளர்களின் பெரும் வரவால், திருப்பூர் ஒரு வேலைவாய்ப்பு மையமாக மட்டுமல்லாமல், சில குற்றவாளிகளுக்கான “புகலிடமாக” மாறி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். “தொழிலாளர்கள்” என்ற போர்வையில் சிலர், முறைப்படியான ஆவணங்கள் இல்லாமல் திருப்பூரில் தங்கி, கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனவரி 2025 முதல் ஏப்ரல் 2025 வரை, பல்லடம், மங்கலம், நல்லூர், காலேஜ் ரோடு, வாவிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இவற்றில் ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 130 வங்கதேசத்தவர்கள் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை திருப்பூருக்கு அழைத்து வந்த “ஏஜென்டுகள் யார்?” என்பதையும், அந்த நெட்வொர்க் எப்படி செயல்படுகிறது என்பதை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மற்றும் கோவையில், போக்குவரத்து மையங்களான ரயில்வே நிலையம் மற்றும் பஸ்ஸ்டாண்டுகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமளிக்கும் நபர்களிடம் அவர்களது அடையாள ஆவணங்கள் மற்றும் விசா தகவல்களை சரிபார்க்கின்றனர்.


சிலர், சொந்த காரணங்களை காட்டி ஜாமீன் கோரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், மீண்டும் சட்டத்திற்கும் பாதுகாப்புக்கும் எதிராகச் செயல்பட முடியாத வகையில், அவர்களை முகாம்களில் அனுப்பும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

இது குறித்து போலீசார் கூறியதாவது: “வங்கதேசத்தவர்கள் மீது கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கைது செய்யப்படுவர். திருப்பூர் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தங்கள் பகுதியில் சந்தேகமான நபர்கள் இருக்கின்றனர் என்றால் உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்க வேண்டும்,” என்று தெரிவித்தனர்.