Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிமுறைகள் இன்று, மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன் படி, ஏ.டி.எம். பரிவர்த்தனை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், வாடிக்கையாளர்கள் கவனமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மெட்ரோ நகரங்களில்: ஒரே மாதத்தில் 5 இலவச பரிவர்த்தனைகள் வரை மட்டும் கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். மெட்ரோ அல்லாத நகரங்களில்: மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகள். இதைத் தாண்டும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.

ரொக்கம் அல்லாத பரிவர்த்தனைகள் (உதா: பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட்) ஆகியவற்றுக்கும் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு முன் ரூ.6 இருந்த கட்டணம் தற்போது ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வங்கிகள் இடையேயான ஏ.டி.எம். பரிவர்த்தனைகளுக்கான செலவினங்களைச் சமநிலைப்படுத்தும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பரிவர்த்தனை கட்டணங்களில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போதைய நிதிசுமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை (UPI, Mobile Banking, NEFT, IMPS) முறைகளைப் பயன்படுத்தினால் கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்கலாம். மேலும் மாதத்தில் பணம் எடுக்க வேண்டிய திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டும், ஒரே நேரத்தில் தேவையான தொகையை எடுத்தும் இந்த கூடுதல் கட்டணங்களை தவிர்க்கலாம்.