
நீலகிரி மாவட்டம் உதகை வனப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற தொட்டபெட்டா காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று (06.05.2025) ஒரு நாள் தடையை வனத்துறை அறிவித்துள்ளது.
தற்போது நீலகிரி வனப் பகுதியில் வறட்சி நிலை காணப்படுவதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு விலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் காட்டு விலங்குகள் வருவது அதிகமாகியுள்ளது.
இந்நிலையில், நேற்று ஒரு ஒற்றை காட்டு யானை, வனப்பகுதியை விட்டு வெளியேறி, தொட்டபெட்டா செல்லும் சாலையில் உலவியது. இந்த காட்சி பலரை அதிர்ச்சியடையச் செய்தது. பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்தையும் அந்த யானை சேதப்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் வனத்துறை, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, இன்று ஒரு நாள் முழுவதும் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் வழியில் பயணிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, “ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அப்பகுதியில் உலாவி வருவதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவே இந்த தடையை விதிக்க நேர்ந்தது.”
தற்போது, சுமார் 40 பேர் கொண்ட வனத்துறை குழு, யானையை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.