
இலங்கை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வந்தார். புனித ராம நவமி நாளில், இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு புதிய அத்தியாயமாக கருதப்படும் புதிய பாம்பன் ரயில் பாலம் இன்று மதியம் 1 மணியளவில், பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.
புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் ராமேஸ்வரம் – தாம்பரம் (சென்னை) இடையிலான புதிய ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர், சாலை பாலத்தின் மேல் நின்று, ஒரே நேரத்தில் ஒரு ரயிலுக்கும், ஒரு கப்பலுக்கும் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின், அவர் செங்குத்துத் தூக்கு பாலத்தில் போக்குவரத்து செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டார். இந்த நிகழ்வில், பிரதமர் மோடி தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து கலந்து கொண்டார்.
இந்தியாவின் முதல் செங்குத்துத் தூக்கு ரயில் பாலம்!
- இந்த பாலத்தில், 570 டன்னால் உருவாக்கப்பட்ட 240 அடி நீளமுள்ள செங்குத்து தூக்கு பாலம் பொருத்தப்பட்டுள்ளது.
- பாலம் இரு பக்கங்களிலும் 34 மீட்டர் உயரம் கொண்ட இரும்பு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது.
- இதில் உள்ள ராட்சத இரும்பு வீல்களும் கம்பிகளும் மூலம் பாலம் ‘லிப்ட்’ முறையில் உயர்த்தி, கப்பல்கள் கடந்து செல்ல ஏற்பாடாக அமைக்கப்பட்டுள்ளது.
இயந்திர அமைப்புகள் & பாதுகாப்பு கருவிகள்
- ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் தூக்கு பாலம் 5 நிமிடம் 30 வினாடிகளில் திறக்க முடியும்.
- இந்த பாலம் 17 மீட்டர் உயரம் வரை திறக்கக்கூடியது – இதனால் கடற்படை கப்பல்கள் மற்றும் கனரக சரக்கு கப்பல்கள் தடையின்றி செல்ல முடியும்.
- தூக்கு பாலத்தின் சாதாரண நிலை உயரம் 11 மீட்டர் – இதன் கீழ் மீன்பிடி படகுகள் சுதந்திரமாக கடந்து செல்லும் வசதி உள்ளது.
வானிலை கண்காணிப்பு & பாதுகாப்பு
- பாலத்தில் அனிமோ மீட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
- மணிக்கு 55 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசியால், இது தானாகவே சிக்னல் காட்டி ரயில்கள் செல்ல தடை செய்யப்படும்.
இருவழி மின்சார ரயில் வசதி
- புதிய ரயில் பாலம் முழுமையாக மின்சார ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- 134 ரயில்கள் வாரத்திற்கு, அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்தில் இயக்க முடியும்.
- பாலத்தின் இரு பக்க 34 மீ உயர கோபுரங்களின் மேல் தளத்திற்கு ‘லிப்ட் வசதி’ அமைக்கப்பட்டுள்ளது.
துருப்படிப்பு தடுப்பு தொழில்நுட்பம்
- பாலத்தில் ‘ஜிங்க் மெட்டலிசிங்’ மற்றும் ‘பாலிசிலோசின் பெயின்ட்’ பூசப்பட்டுள்ளது.
- இது 35 ஆண்டுகள் துருப்பிடிக்காமல் தாங்கும் தன்மையுடையது.
- இந்த உயர் தர ரசாயன பெயின்ட் பூசலுக்கே ஒரு கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
- இத்தகைய பெயின்ட் இந்தியாவில் இதுவரை எந்த ரயில் பாலத்திலும் பயன்படுத்தப்படவில்லை.
சர்வதேச தரத்தில் கட்டமைப்பு
- பாலத்தின் வடிவமைப்பு ஸ்பெயின் நாட்டு பொறியாளர்களால் செய்யப்பட்டு, அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் மெக்கானிக்கல் தூக்கு பாலங்களின் மாதிரியில் கட்டப்பட்டுள்ளது.
புதிய பாலம் – புதிய பெருமை
இந்த புதிய ரயில் பாலம், இந்திய தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் ஒரு பிரதிநிதியாக அமைந்துள்ளது. ராமேஸ்வரம் மற்றும் பாம்பனை இணைக்கும் இப்புது பாலம், மக்கட்கும் பொருளாதாரத்துக்கும் வலிமையான ஒற்றுமை கட்டுமானமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.