
பாகிஸ்தானுடன் தொடரும் போர் பதற்ற சூழ்நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. எரிபொருட்களுக்கு குறைபாடு ஏற்படும் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. இதனால், பல பகுதிகளில் பொதுமக்கள் பேனிக் முறையில் எரிபொருள் வாங்க குவிந்ததால் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியன் ஆயில் கழகம் (Indian Oil Corporation – IOC) ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டு, நாட்டின் எரிபொருள் நிலைமை குறித்து மக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியன் ஆயில் வெளியிட்டுள்ள விளக்கம்: “நாடு முழுவதும் எங்களிடம் போதிய அளவு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் இருப்பு உள்ளது. எங்கள் விநியோகங்கள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை; எரிபொருள் சேகரிப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”
சமீபத்திய போர் மோதல்களின் காரணமாக, சமூக வலைதளங்களில் “எரிபொருள் கிடைக்காமல் போவதாக” பரவிய செய்திகள் பல இடங்களில் தவறான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, நாட்டின் முக்கியமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருப்பதால், அனைத்துப் பகுதிகளிலும் எரிபொருள் சேவையை வழக்கமான முறையில் தடை இல்லாமல் வழங்க முடியும் எனவும், மக்கள் அமைதியாக இருந்து தேவையற்ற கூட்டத்தை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் தேவையற்ற பீதியை தவிர்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ஒருமித்தமாக வலியுறுத்துகின்றன.