
முட்டையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஒரு வருட காலத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு தற்போது தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் உடனடியாக அமலில் வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மயோனைஸ் இன்று தெரு உணவுகள், ஷவர்மா, வறுக்கப்பட்ட மற்றும் தந்தூரி வகை அசைவ உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், முட்டை அடிப்படையிலான மயோனைஸ், குறிப்பாக சுடப்படாத நிலையில் பயன்படுத்தப்படும் போது, அதை உண்பவர்களுக்கு தீவிர சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அரசுப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், உடனடியாக முட்டை அடிப்படையிலான மயோனைஸ் தயாரிப்பு, விற்பனை, விநியோகம் ஆகிய அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் எனவும், இதனை மீறுபவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அபராதம் விதித்தல், உரிமம் ரத்து செய்தல் அல்லது சட்டப்படி தண்டனை வழங்கப்படுவதை உள்ளடக்கியதாகும்.