
காஸா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் இயக்கத்தால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்த தகவலின் படி, இத்தாக்குதல்களில் 330 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு நிறுவனம் (ISA-ஷின் பெட்) இணைந்து வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்காக பயன்படுத்தப்படும் பயங்கரவாதிகளின் புகலிடங்கள், ஏவுதளங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்” மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “இஸ்ரேல் படைகள் தற்போது காஸா முழுவதும் பயங்கரவாத இலக்குகளை தாக்கி வருகின்றன” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஸா பகுதிகளில் வான்வழித் தாக்குதல்
காஸாவின் உள்துறை துணை அமைச்சர் மொகமத் அபு வஃபா இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஹமாஸ் இயக்கத்தில் முக்கிய பாதுகாப்பு அதிகாரியாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஜனவரி 19ஆம் தேதிக்குப் பிறகு, காஸாவில் இது வரை நடந்த மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாக இது கருதப்படுகிறது. காஸா, ரஃபா, கான் யூனுஸ் ஆகிய நகரங்களில் 20க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இலக்குகளைத் தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் அரசின் நிலைப்பாடு
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ஹமாஸ் அமைப்பு எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்க மறுக்கிறது. இதனால், இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா முன்னாள் தூதர் டேன்னி டானோன், “எங்கள் எதிரிகளுக்கு எந்த தயவையும் காண்பிக்க மாட்டோம். ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹமாஸ் பதில்
ஹமாஸ், “இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. இதன் மூலம், எஞ்சியுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் நிலைமையை நிச்சயமற்றதாக்கியுள்ளது” என்று கூறியுள்ளது.
அத்துடன், இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் அவை தலையிட வேண்டும் என்று ஹமாஸ் கோரியுள்ளது.
காஸாவில் மீண்டும் நெருக்கடி நிலை
காஸாவில் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக 48,520க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் இயக்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
70% கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, மருத்துவ வசதிகள் முற்றிலும் சீர்குலைந்துள்ளன, மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அடிப்படை தேவைகளுக்கே தட்டுப்பாடு நிலவும் சூழலில், காஸா மேலும் மோசமான நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது.

