
ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் இருதரப்பு ராணுவப் பயிற்சியான “டஸ்ட்லிக்”கின் ஏழாவது பதிப்பு, உஸ்பெகிஸ்தானின் நமங்கனில் உள்ள குரும்சரே களப் பயிற்சிப் பகுதியில் நேற்று நடைபெற்ற தொடக்க விழாவுடன் தொடங்கியது. சட்டவிரோத ஆயுதக் குழுக்களை ஒழிப்பதை இலக்காகக் கொண்ட கூட்டு சிறப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, இந்திய ராணுவம் மற்றும் உஸ்பெகிஸ்தான் ராணுவத்திற்கு இடையேயான செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
டஸ்ட்லிக் பயிற்சியானது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தானின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டைப் பிரதிபலிப்பதோடு, இரு ராணுவங்களுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, தோழமை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது என்று இந்திய ராணுவம் கூறியது. உஸ்பெகிஸ்தானின் கிழக்கு ராணுவ மாவட்டத் தளபதி மேஜர் ஜெனரல் சைடோவ் ஒய்பெக் அஸாடோவிச், தொடக்க விழாவின் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்தப் பயிற்சி இந்த மாதம் 25ஆம் தேதி வரை தொடரும்.
