Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

எரிவாயு மீண்டும் ரஷ்யாவிலிருந்து? ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்!

உலக அரசியல் மன்றங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஐரோப்பாவின் முக்கிய நாடுகளான ஜெர்மனியும் பிரான்சும், ரஷ்யாவிலிருந்து மீண்டும் எரிவாயு (நெச்சுரல் கேஸ்) இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருகின்றன என்பது தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது.

2022-ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனில் படையெடுத்து போர் தொடங்கியதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரஷ்யாவிலிருந்து வரும் எரிசக்தி ஆதாரங்களை கட்டுப்படுத்த தொடங்கியது. இந்த முடிவால், ரஷ்யாவின் வருவாய் கணிசமாக பாதிக்கப்பட்டது, ஏனெனில் ஐரோப்பா அதன் முக்கியமான வாடிக்கையாளராக இருந்தது.

இந்நிலையில், பிரான்சின் முக்கிய எரிசக்தி நிறுவனமான Engie மற்றும் TotalEnergies ஆகியவை, ரஷ்யாவுடன் மீண்டும் எரிவாயு வர்த்தகத்தை தொடங்கும் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து வருகின்றன. Engie நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரி டிடியர் ஹொல்லோ (Didier Holleaux), “உக்ரைனில் சமாதானம் நிலவத் தொடங்கும் சூழ்நிலையில், ஆண்டுக்கு 60 பில்லியன் முதல் 70 பில்லியன் கன மீட்டர் அளவிலான ரஷ்ய எரிவாயுவை மீண்டும் இறக்குமதி செய்ய முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

TotalEnergies நிறுவனத் தலைவர் பேட்ரிக் புயனே, “ஐரோப்பாவில் எரிசக்தி தேவைப்பட்டால் ஒரு நாட்டை மட்டும் நம்பி இருக்காமல், பல்வேறு இடங்களில் இருந்து பெறும் வகையில் செயல்பட வேண்டும்” என்றார். இது ஒரு நீண்டகால பாதுகாப்புத் திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியின் முக்கிய தொழில்துறை மையமான Leuna Chemical Park-ல் செயல்படும் நிறுவனங்களும் ரஷ்ய எரிவாயு மீண்டும் தேவையாக இருப்பதை தெரிவித்துள்ளன. Leuna-Harze நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிளாஸ் பௌர் (Klaus Bauer) கூறும்போது, “எங்களுக்கு மலிவான எரிசக்தி தேவை. அது எங்கிருந்து வந்தாலும் பரவாயில்லை. நாங்கள் வணிக ரீதியாக சிந்திக்கிறோம்,” என தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது ரஷ்யாவின் Gazprom நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தில் எரிவாயு விநியோகத்தை மிகக் குறைந்த அளவிலேயே மேற்கொண்டு வருகிறது. மேலும், உக்ரைன் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குப் பிறகு வாயு அனுப்பும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்துள்ளதால், ரஷ்யா நேரடியாக ஐரோப்பாவுக்கு எரிவாயு வழங்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

இந்த சிக்கலான சூழ்நிலைகளில், ரஷ்யா மீண்டும் ஐரோப்பாவுக்குள் எரிவாயு அனுப்புமா என்பது ஒரு பரபரப்பான எதிர்பார்ப்பாக உள்ளது. ரஷ்யா, ஐரோப்பா மற்றும் உக்ரைன் ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையே உள்ள நுணுக்கமான அரசியல் சமநிலையைக் கொண்டு தான் எதிர்கால முடிவுகள் அமையும் என்று தெரியவருகிறது.