Tuesday, July 28பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

NEET போராட்டங்கள்: வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக பீகார் மற்றும் அசாம் அறிவிப்பு!

NEET-UG தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெற பீகார் மற்றும் அசாம் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகள் (FIR), குற்றவியல் புகார்கள் மற்றும் விளக்கம்கோரும் அறிவிப்புகள் (show-cause notices) ஆகியவற்றைத் திரும்பப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கவுள்ளதாக பீகார் மாநில உள்துறை அமைச்சகம் உறுதியளித்தது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது தடுத்து வைக்கப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள். மேலும், அந்த காலக்கெடுவுக்கு முந்தைய சம்பவங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் நேரடி அல்லது மறைமுக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என்றும் அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

இந்தப் போராட்டங்கள் தொடர்பாக அசாமிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 13 பேர் கைது செய்யப்பட்டதாக அசாம் மாநில உள்துறை மற்றும் அரசியல் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மாநிலக் காவல் துறையினர் எவ்வித பாதகமான சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகள், அவை எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி உடனடியாகத் தொடங்கப்படும் என்று அந்த அறிவிப்பு தெரிவித்தது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட தனிநபர்கள் மீது இனி எவ்வித பாதகமான நடவடிக்கையையும் எடுக்க அரசுக்குத் திட்டமில்லை என்றும், இது தொடர்பான விவகாரம் இனி எவ்வித நடவடிக்கையும் இன்றி முடித்து வைக்கப்பட்டதாகக் கருதப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.