
பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த புகாரின் பேரில் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது.
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக அமலாக்க துறை டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. சிறப்பு நீதிமன்றம் ஏப்ரல் 25 ஆம் தேதி அடுத்த விசாரணை தேதியாக நிர்ணயித்துள்ளது.குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர் சுமன் துபேயும் ஒரு குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பழிவாங்கும் அரசியலாக, எதிர்க்கட்சித் தலைவர்களை ‘மிரட்ட’ அரசு நிறுவனங்களைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இது பிரதமர் நரேந்திர மோடியின் சதி என்று கூறி, புலனாய்வு அமைப்பின் நடவடிக்கைகளை நிராகரித்தார். “இது காங்கிரஸை அழிக்க பிரதமர் மோடியின் சதி… நீங்கள் அவர்களை (ED) எதையும் செய்ய வைக்கலாம், அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் பாஜக மற்றும் பிரதமர் மோடியைப் பற்றி பயப்படவில்லை… இதை எதிர்த்துப் போராடுவோம்,” என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 11 அன்று, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சொந்தமான யங் இந்தியன் லிமிடெட் (YIL) நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) சொத்துக்கள் அமைந்துள்ள டெல்லி, மும்பை மற்றும் லக்னோவில் உள்ள சொத்துப் பதிவாளர்களுக்கு ED நோட்டீஸ் அனுப்பியது. AJL இன் சொத்துக்களுடன் தொடர்புடைய ரூ.988 கோடி மதிப்புள்ள குற்றச் செயல்களின் மூலம் கிடைத்த வருமானத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் விசாரணைகளைத் தொடர்ந்து ரூ.661 கோடி மதிப்புள்ள அசையாச் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வளாகத்தை காலி செய்யக் கோரும் நோட்டீஸ், மும்பையின் பாந்த்ரா பகுதி மற்றும் லக்னோவில் உள்ள பிஷேஷ்வர் நாத் சாலையில் உள்ள AJL கட்டிடத்தில் உள்ள சொத்துக்களில் ஒட்டப்பட்டன.
பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த தனியார் புகாரின் அடிப்படையில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் ஜூன் 2014 உத்தரவின் அடிப்படையில், ED இந்த வழக்கில் 2021 இல் தனது விசாரணையைத் தொடங்கியது.
நேஷனல் ஹெரால்டு என்பது AJL ஆல் வெளியிடப்பட்டு யங் இந்தியனுக்குச் சொந்தமான செய்தித்தாள் ஆகும். யங் இந்தியன் நிறுவனத்தில் சோனியாவும் ராகுலும் பெரும்பான்மை பங்குதாரர்களாக உள்ளனர், ஒவ்வொருவருக்கும் 38 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கணவரும் ராகுல் காந்தியின் மைத்துனருமான ராபர்ட் வத்ராவிடம், ஹரியானாவில் நடந்த ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்தில் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தியது.
வத்ராவின் நிறுவனமான ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி, 2008 ஆம் ஆண்டு ஹரியானாவில் ரூ.7.5 கோடிக்கு நிலத்தை வாங்கியது தொடர்பான வழக்கு இது. பின்னர் அவர் ஒரு வீட்டுவசதி சங்கத்தை உருவாக்க அனுமதி பெற்றார், அதன் மதிப்பு உயர்ந்தது, அதைத் தொடர்ந்து அவர் அதை ரியல் எஸ்டேட் டெவலப்பர்களான டி.எல்.எஃப்-க்கு ரூ.58 கோடிக்கு விற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.