
டில்லியில் கனமழை, இடி மின்னலுடன் பெய்து வருகிறது . நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில், துவர்கா பகுதியில் மரம் சரிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயார் உயிரிழந்தது, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கனமழை காரணமாக டில்லியின் முக்கிய சாலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் தேங்கி, சாலைகள் குளம்போல மாறியுள்ளதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக நகரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் புழுதி காற்றும் அதிவேகத்தில் வீசியதால் விமான சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 120க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக நேரம் மாறியுள்ளதுடன், சில விமானங்கள் பாதுகாப்புக்காக வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் டில்லிக்கு தொடக்கத்தில் ரெட் அலர்ட் அறிவித்தது. பின்னர், மழையின் தீவிரம் குறைந்ததால், அது ஆரஞ்சு அலர்ட்டாக மாற்றப்பட்டது. இதற்கிடையே, இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
துவர்கா பகுதியில், விவசாய நிலத்தில் அமைந்துள்ள குடியிருப்பின் மீது சாய்ந்த மரம் விழுந்ததில், அங்கு இருந்த ஒரு குடும்பத்தின் மூன்று சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாய் உயிரிழந்தனர். தந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். இந்த துயரச் செய்தி டில்லி முழுவதும் பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.