Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

மரங்களின் மறுநடவு, கோவையின் பசுமை காக்கும் முயற்சி.

வளர்ந்து வரும் தொழில்மயமான நகரமாக கோவை மாறியுள்ள நிலையில், அதிகரித்து வரும் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை விரிவாக்கத்திற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் பசுமைப் பரப்பு குறையாமல் இருக்க, மரங்களை மறுநடவு செய்யும் திட்டம் கோவையில் சீராக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் (CII) இந்திய பசுமைக் கட்டடக்குழு (IGBC) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, தமிழ்நாட்டின் பெரிய நகரங்களில் கோவை மிக அதிக பசுமைப் பரப்பைக் கொண்ட நகரம் என்ற மதிப்பைப் பெற்றுள்ளது.

தனிநபருக்கான பசுமைப் பரப்பு:
தேசிய சராசரி: 24.6 சதுர மீட்டர்
கோவை: 46.6 சதுர மீட்டர்

இந்த மதிப்பீட்டிற்கு மரங்களின் அளவு, திறந்தவெளி இடங்கள், காற்று மாசு கட்டுப்பாடு, கழிவு மேலாண்மை போன்ற காரணிகள் அடிப்படையாக இருந்தன. இருப்பினும், தொழில் மற்றும் நகர வளர்ச்சி வேகத்துடன், கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவுகளின்படி, ஒரு மரம் வெட்டப்பட்டால், அதற்குப் பதிலாக 10 மரங்கள் நடப்பட வேண்டும். ஆனால், இந்த விதி பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதே சூழல் ஆர்வலர்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. இதைத் தடுக்க, கோவையில் மரங்களை மாற்று இடங்களுக்கு மாற்றி நடும் முயற்சி கடந்த 10 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. சாலை விரிவாக்கம், புறவழிச்சாலை கட்டுமானம் போன்ற திட்டங்களுக்காக அகற்றப்படும் மரங்கள், முடிந்தவரை மறுநடவு செய்யப்படுகின்றன.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அண்ணூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரையிலான சாலை விரிவாக்கப் பணியில் 262 மரங்கள் மறுநடவு செய்யப்பட்டன. இதற்காக தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இந்தப் பணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் “கிரீன் கேர்” அமைப்பின் நிர்வாகி சையது கூறுகையில், “மரங்களை வெட்டுவதைவிட, அவற்றை மாற்றி நடுவது சூழலுக்கு நல்லது. இந்த முயற்சியை மேலும் பல பகுதிகளில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.