Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

“பாவேந்தர் பாரதிதாசன்” அவர்களின் 135-வது பிறந்த நாள்!

– இதழாசிரியர் பொன். வசந்தகுமாரன்

பாவேந்தர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் நாள் புதுச்சேரியில் கனகசபை முதலியார், இலக்குமி அம்மையார் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கனக சுப்புரத்தினம். சுப்புரத்தினம் இளமையிலேயே கவி இயற்றும் திறம் பெற்றுத் திகழ்ந்தார். பாவேந்தர், ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி பயின்றார். புதுவை மகாவித்வான் ஆ.பெரியசாமிப் பிள்ளை அவர்களிடமும், பங்காரு பத்தர் அவர்களிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

புதுவை மாநிலக் கல்லூரியில் உயர்நிலைக் கல்வி பயின்று பின்னர்த் தமிழ்ப் புலவர் வகுப்பில் சேர்ந்து கல்வி கற்றுப் புலவராகத் தேர்ச்சி பெற்றார்.

பாவேந்தர் சுப்பிரமணிய பாரதியாரைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார். பாரதியாரின் புலமையும், எளிமையும் கவிஞரைக் கவர்ந்தன. பாரதி மீது பற்று மிகக் கொண்டு தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். 1909-ஆம் ஆண்டு இவர் தன் பதினெட்டாம் வயதில் காரைக்காலைச் சேர்ந்த நிரவி எனும் ஊரில் உள்ள பள்ளியில் அரசு ஆசிரியராகப் பணி ஏற்றார். பாவேந்தர் தன் கற்பனைத் திறத்தால் தமிழ் உலகை வலம்வரத் தொடங்கினார். தேசிய இயக்கத்தில் சேர்ந்து கொண்ட பாவேந்தர் கைத்தறித் துணிகளைத் தெருத்தெருவாக விற்பனை செய்தார்.

தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன், புதுவைமுரசு, துய்ப்ளேக்ஸ், முல்லை, குயில் ஆகிய இதழ்களுக்குப் பாவேந்தர் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பெரியார் ஈ.வெ.ராவின் சுயமரியாதைக் கருத்துகள் பாவேந்தரைக் கவர்ந்தன. அதன் மூலம் பெரியாருடன் தொடர்பு கொண்டார். சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர் என்று பெரியார் இவரைப் பாராட்டினார்.

இவர் அப்போது அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற திராவிட இயக்கத்தினரிடம் நட்புக் கொண்டிருந்தார்.

சென்னை சாந்தோம் சாலையில் ‘முத்தமிழ் மன்றம்’ நிறுவினார். அறிஞர்களின் வாழ்த்து, பாராட்டுக் கவிதைகள், கட்டுரைகள் கொண்ட ‘புரட்சிக் கவிஞர்’ என்னும் தொகுப்பு நூலை முல்லை முத்தையா வெளியிட்டார். அதிலிருந்து இவர் புரட்சிக் கவிஞர் எனப்பட்டார்.

பாவேந்தரின் கவிதைகள் குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம், காதலா? கடமையா? தமிழச்சியின் கத்தி, இளைஞர் இலக்கியம், இசையமுது முதலிய அரிய நூல்கள் கவிஞரின் படைப்பாகும்.

பாவேந்தரின் 55-ஆம் வயது பிறந்தநாள் விழா நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்றது. அவ்விழாவில் பேரறிஞர் அண்ணாவின் முயற்சியால் ரூ.25000 பணமுடிப்பு வழங்கப்பட்டது. இதே ஆண்டில் நவம்பர் மாதம் அரசு ஆசிரியப் பணியிலிருந்து பாவேந்தர் ஓய்வு பெற்றார். 1954-ஆம் ஆண்டு புதுவை சட்டமன்றத் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சட்டமன்றத்திற்குத் தலைமை வகித்தார். 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திடீரென உடல் நலிவுற்றார் பாவேந்தர். அதன் பின்னர் சென்னைப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழன்னை பெற்றெடுத்த தவப்புதல்வர், அழகின் சிரிப்பு, பாடிவந்த நிலா, 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் நாள் சென்னையில் இயற்கை எய்தினார். மறு நாள் அவரது உடல் புதுவை மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 1965-ஆம் ஆண்டு புதுவையில் கவிஞரின் நினைவு மண்டபம் புதுவை நகரசபையால் கட்டப்பட்டது. 1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற 2 ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் கவிஞருக்குச் சிலை எழுப்பப்பட்டது.

1972-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் நாள் புதுவை பூங்காவில் புதுவை அரசின் சார்பில் கவிஞருக்கு முழு உருவச்சிலை நிறுவப்பட்டது.

பாரதிதாசன் புதுவையில் வாழ்ந்த வீட்டைப் புதுவை அரசு விலைக்கு வாங்கியது. அங்கு கவிஞரின் நினைவு நூலகம் செயல்பட்டு வருகின்றது. பாவேந்தர் பயன்படுத்திய பொருட்கள் மக்களின் பார்வைக்கு ஆங்கே வைக்கப்பட்டுள்ளது. 1982-ஆம் ஆண்டு திருச்சியில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்திற்குப் பாவேந்தரின் நினைவாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் எனத் தமிழக அரசு பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தது.

1990-ஆம் ஆண்டு தமிழக அரசு கவிஞரின் நூல்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கியது. 01.11.1991 முதல் இவை மக்களின் உடைமையாகும் என்றும் அரசு அறிவித்தது. ஆண்டுதோறும், ஏப்ரல் 29-ஆம் நாள் தமிழக அரசு சார்பிலும், புதுவை அரசு சார்பிலும் பாவேந்தரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

‘‘சிங்காரவேலர் மறைக்கப்பட்டமா மேதை” எனறு அறிஞர் அண்ணா சொன்னது போல், “இந்தியத் தொழிலாளர்களின் தந்தை” சிங்காரவேரரின் சீர்திருத்த சிந்தனைகளையும் இந்தியத் தொழிலாளர்களுக்கான எடுக்கப்பட்ட எல்லா விதமான போராட்டங்கள், சட்டப் போராட்டங்களையும், இந்தியாவிலேயே முதல் முதல் தொழிலாளர் தினமான “மே” தினத்தை சட்டப்பூர்வமாக கொண்டாடி அன்று “லேபர் கிஸான் ” எனும் விவசாய தொழிலாளர் கட்சியையும் ஆரம்பித்து அதோடு “லேபர் கிஸான்” எனும் ஆங்கிலப் பத்திரிகையும், “புது உலகம் ” எனும் வார இதழையும், “தொழிலாளி” மாத இதழையும் ஆரம்பித்து வைத்ததை பார்த்து பாவேந்தர் பாரதிதாசன் பல பாடல்களை எழுதியுள்ளார்.

‘‘போர்க்குணம் மிகுந்த செயல் முன்னோடி.
பொதுவுடைமைக்கு ஏகுக அவர் பின்னாடி.’’

“நல்லறிவும் பெருநோக்கும் கேட்பீராயின் நம் தோழன் சிங்காரவேலன் கண்ட வெல்லு தமிழ்ப் புதுஉலகம் எனும் மாதவெளியீட்டை வாசித்தல் வேண்டும் என்போம்.”

“பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்
பொய் புரட்டறியாமை பொசிந்ததும் அவனால்
சங்கம் தொழிலாளர்க்கமைந்ததும் அவனால்
தமிழர்க்குப் புத்தெண்மை புகுந்ததும் அவனால்
மூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால்
புதுவுலகக்கனா முளைத்ததும் அவனால் “
என்கிறார் பாரதிதாசன்