Wednesday, August 19பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஈரான்: நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும்!

அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) கீழ் உள்ள அனைத்து நிபந்தனைகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை, ஹார்முஸ் நீரிணை கடல்வழிப் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் கூறியது.

இந்த முக்கியமான நீர்வழியை மீண்டும் திறப்பதை, வெளிநாட்டுத் தடைகளை முழுமையாக நீக்குதல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துதல் ஆகியவற்றுடன் ஈரான் நேரடியாக இணைத்துள்ளது. மோதலை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என்று எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், எதிரிகளின் நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு ஏற்றவாறு அவர்களுக்குக் கடுமையான தோல்வியைப் பரிசளிக்க இஸ்லாமியக் குடியரசு தயாராக உள்ளது என்று வலியுறுத்தினார்.

இராணுவ மோதல்களை நிறுத்துவதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கிய 60 நாள் கால அவகாசம், ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பை வழங்கியது என்று கூறி காலிபாஃப் இராஜதந்திர நடவடிக்கையை நியாயப்படுத்தினார். உள்நாட்டு மன உறுதி குறித்த விவகாரத்தைப் பேசுகையில், தங்கள் “தியாகிகளை” கௌரவிப்பதிலும் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதிலும் ஈரான் உறுதியாக உள்ளது என்று காலிபாஃப் வலியுறுத்தினார். அரசியல் அதிகாரிகளும் பொதுமக்களும் ஒற்றுமையுடன் இருப்பதைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், உள்நாட்டு ஸ்திரத்தன்மையைக் குலைக்க மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முயற்சிகளுக்கு எதிராகவும் எச்சரித்தார்.

60 நாள் காலக்கெடு முடிந்த பின்னரும், இந்த முக்கிய கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படாமலே உள்ளன. ஈரானைப் பொறுத்தவரை, ஹார்முஸ் வழியாகப் போக்குவரத்தை இயல்பாக்குவது என்பது முற்றுகையை நீக்குதல், படைகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் இழப்பீடு வழங்குதல் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.

மறுபுறம், ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் திட்டம் இல்லை என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணை “திறந்த நிலையிலும் செயல்பாட்டிலும்” இருப்பதாக வலியுறுத்தினார். சமூக ஊடகப் பதிவு ஒன்றில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் முற்றுகை “முழு வீச்சில் அமலில் உள்ளது” என்று டிரம்ப் குறிப்பிட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து நீர் கண்ணிவெடிகளும் (water mines) அகற்றப்பட்டுவிட்டன என்றும் அவர் கூறினார். போர் முடிவுக்கு வருவதற்கான தெளிவான அறிகுறி ஏதுமின்றி, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான 60 நாள் பேச்சுவார்த்தைக் காலம் இந்த வாரத்துடன் முடிவடைந்த நிலையில் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.