
ஹோர்முஸ் நீரிணையானது வணிகக் கப்பல் போக்குவரத்திற்காக முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி ஆகியோர் அறிவித்துள்ளனர். லெபனானில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்தத்திற்கு இணங்க, இந்த நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் செல்வதற்கான வழி முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக திரு. அராக்ச்சி தனது சமூக ஊடகப் பதிவில் அறிவித்தார்.
எனினும், கப்பல்கள் ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வழித்தடத்தையே பின்பற்ற வேண்டும். ஹோர்முஸ் நீரிணை முழுமையான போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதாக திரு. டிரம்பும் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே 10 நாட்கள் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் 11 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தன. கடந்த சில வாரங்களாக இந்த நீரிணை பெரும்பாலும் மூடப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது. ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரம் குறித்த பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டத்தை, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இன்று நடத்தின.
