Sunday, January 25பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

வங்கதேச போராட்ட குழு தலைவர் மரணம்: டாக்காவில் மீண்டும் வெடித்த வன்முறை.

வங்கதேசத்தில் அரசியல் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னணியில் இருந்து வழிநடத்திய எதிர்க்கட்சி தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி, துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்குப் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்தைக் கண்டித்து தலைநகர் டாக்கா உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில், மாணவர்கள் தலைமையிலான எழுச்சி குழு முன்னெடுத்த போராட்டங்கள் காரணமாக ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அந்தப் போராட்டங்களுக்கு தலைமையேற்றவர் 32 வயதான ஷெரிப் உஸ்மான் ஹாடி. போராட்டங்களுக்குப் பின்னர் அவர் நாட்டின் அரசியல் களத்தில் முக்கிய தலைவராக உருவெடுத்து, மக்களிடையே பரவலான ஆதரவைப் பெற்றார். இதற்கிடையில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தற்போது நாட்டை நிர்வகித்து வருகிறது.

தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு:
வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ‘இன்கிலாப் மஞ்ச்’ அமைப்பின் சார்பில் போட்டியிட ஷெரிப் உஸ்மான் ஹாடி முடிவு செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மசூதி ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பிய போது, மர்ம நபர்களால் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். உடனடியாக டாக்கா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ‘இன்கிலாப் மஞ்ச்’ அமைப்பும் சமூக ஊடகங்கள் வழியாக ஹாடியின் மரணத்தை உறுதிப்படுத்தியது.

அரசு நடவடிக்கைகள்: துக்கம், தேடுதல் வேட்டை, பரிசு அறிவிப்பு:
ஹாடியின் மரணத்தையடுத்து, வங்கதேச அரசு ஒருநாள் அரசு துக்கம் அறிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதலில் தொடர்புடையவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இரண்டு முக்கிய சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறை, அவர்களை கைது செய்ய உதவும் தகவல்களுக்கு ஐந்து மில்லியன் டாக்கா வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

வன்முறை வெடிப்பு; செய்தி நிறுவனங்கள் மீது தாக்குதல்:
இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் ஹாடியின் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சில இடங்களில் செய்தித்தாள் அலுவலகங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகவும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பாதுகாப்புப் படைகள் கூடுதல் கண்காணிப்புடன் களமிறக்கப்பட்டுள்ளன.

அமைதி காக்க இடைக்கால அரசின் வேண்டுகோள்:
இந்தச் சூழலில், வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ஹாடியின் மரணத்திற்கு காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.