
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்ய வேண்டியது அவசியம், இல்லையெனில் இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொருளாதார தடைகளை அதிகரித்து ஈரானை தனிமைப்படுத்துவோம் என அவர் அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து, போர் வெடிக்குமா என்ற கவலை எழுந்துள்ளது.
அணுசக்தி திட்டத்தில் ஈரான் தீவிரம் காட்டி வரும் நிலையில், டொனால்ட் டிரம்ப் அதனை எதிர்த்து வருகிறார். ஈரான் அணுஆயுதம் உருவாக்கக்கூடாது என்பதே அவரது நிலைப்பாடு. ஆனால், அமெரிக்காவுடன் உறவு மோசமடைவதால், நாட்டின் பாதுகாப்புக்காக அணுஆயுதம் அவசியம் என ஈரான் கருதுகிறது. இதனால், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தம் செய்ய வேண்டும் என டிரம்ப் தீர்மானித்தார்.
ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனி மற்றும் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்த அழைப்பை மறுத்தனர். “இது பழைய ஈரான் அல்ல, அமெரிக்காவின் கட்டளைகளை ஏற்க முடியாது” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அராக்சி துணிச்சலாக தெரிவித்தார்.
ஈரான் ஒப்பந்தத்துக்கு வராவிட்டால், இதுவரை காணாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், “Secondary Tariffs” மூலம் ஈரான் மீதான பொருளாதார தடைகளை பலப்படுத்தும் திட்டத்தையும் அமெரிக்கா அமல்படுத்தவுள்ளது. இதனால், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் மற்ற நாடுகளும் நெருக்கடியில் சிக்கலாம்.
இடையே, ஓமன் நாட்டின் மூலமாக ஈரான், அமெரிக்காவிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அதன் விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
2015ல் ஈரான் – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், 2018ல் டிரம்ப் அதனை ரத்து செய்தார். தற்போது, ஈரானுடன் புதிய ஒப்பந்தம் செய்ய அவர் முயற்சிக்கும் போதிலும், ஈரான் அதனை கடுமையாக நிராகரித்துள்ளது. இதனால், இந்த மோதல் மிகப்பெரிய அளவுக்கு செல்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.