
தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 01) முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, 5 முதல் 25 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே அறிவித்திருக்கும் படி, தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதன் பேரில், சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடி, சென்னை புறவழிச்சாலை, தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலையின் வானகரம் சுங்கச்சாவடி, தாம்பரம் – புழல் நெடுஞ்சாலை உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் உயர்ந்த கட்டணம் இன்று முதல் வசூலிக்கப்படுகிறது. இந்த மாற்றம் நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த கட்டண அமைப்பு 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தமிழகத்தின் 78 சுங்கச்சாவடிகளில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலாகியுள்ளது.