
ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று (ஏப்ரல் 1) முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு மே 7 முதல் இ-பாஸ் நடைமுறையில் கொண்டுவரப்பட்டது. அந்த வழக்கின் அடிப்படையில், தற்போது மீண்டும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவின்படி, இம்முறை ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறையை கடைப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டக் கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்ததாவது:
“ஏப்ரல் 1 முதல், ஒவ்வொரு நாளும் முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும். சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் பரிசோதிக்கப்பட்டு, அதன் பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படும்.”
பயணிகள் https://epass.tnega.org/home இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், ‘க்யூஆர்’ கோடு முறையில் சோதனைச் சாவடிகளில் ஸ்கேன் செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகன எண்ணிக்கைக் கட்டுப்பாடு:
🔹 ஊட்டி:
வார நாட்களில்: 6,000 வாகனங்கள்
வார இறுதி நாட்களில்: 8,000 வாகனங்கள்
🔹 கொடைக்கானல்:
வார நாட்களில்: 4,000 வாகனங்கள்
வார இறுதி நாட்களில்: 6,000 வாகனங்கள்