
டெல்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் கவுதம புத்த நகர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில், ஆட்டிசம் பாதித்த 10 வயது மாணவனை அடித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அந்த பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
நொய்டாவின் செக்டர்-55 பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பள்ளியில், வருண் கோயல் என்பவரின் மகன் கல்வி பயில்கிறான். இந்த மாணவன் ஒரு ஆட்டிசம் சிறுவன் ஆவான். ஆட்டிசம் போன்ற கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் இந்த பள்ளியில் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி, அந்த சிறுவனை அவனது குறைபாட்டை பொருட்படுத்தாமல் சிறப்பு பயிற்சியாளராக இருந்த ஆசிரியர் அனில் குமார் பயங்கரமாக தாக்கினார். இந்த சம்பவம் 28ம் தேதியன்று வீடியோ வடிவில் வெளிவந்தது.
வீடியோ வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டதோடு, சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதைப் பார்த்த சிறுவனின் தந்தை வருண் கோயல், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மீது போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சிறப்பு பயிற்சியாளர் அனில் குமார், பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு எதிராக, மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உத்தர பிரதேச தொடக்கக் கல்வித் துறை சார்பில், மாவட்ட கல்வி அதிகாரி ராகுல் பன்வார் சம்பவத்திற்கான விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், பள்ளி சட்டப்படி உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்ததால், பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஆசிரியர் அனில் குமார் கைது செய்யப்பட்டார். முதல்வர், துணை முதல்வர் விசாரணையில் உள்ளனர். அனுமதி இன்றி செயல்பட்ட பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் கல்வி நிலையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.