
வளிமண்டல சுழற்சி காரணமாக, வரும் பிப்ரவரி 28 முதல் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் சில இடங்களிலும், காரைக்கால் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மார்ச் 1ஆம் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை தொடரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் காலை நேரங்களில் லேசான பனிப்பொழிவும் இருக்கும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.