
இந்தியா–பாகிஸ்தான் இடையே தொடர்ந்து நிலவும் போர் பதற்றம், இப்போது இன்னும் தீவிரமடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை தாக்கி அழித்துள்ளது. மேலும், இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த வந்த இரு பாகிஸ்தான் விமானங்களை இந்திய ராணுவம் துல்லியமாக சுட்டு வீழ்த்தி இருக்கிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் அவந்திபுரா பகுதிகளில் இன்று அதிகாலை இது நடந்ததாக பாதுகாப்புத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் இரு ஜெட் விமானங்கள், இந்திய எல்லையை மீறி நுழைந்து தாக்குதலுக்கு முயன்றது. இந்திய விமானப்படை எடுக்கும் உடனடி எதிர்மறை நடவடிக்கையில், இரண்டு விமானங்களும் வானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்நிலையில், வீழ்ந்த விமானங்களின் பைலட்டுகளை, இந்திய ராணுவத்தினர் மற்றும் போலீசார் களத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர். அதேசமயம், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் நான்கு முக்கிய ராணுவ தளங்களை குறி வைத்து துல்லியமான ஏவுகணை தாக்குதல்களில் தரைமட்டமாக்கியுள்ளதாகவும், அந்த தாக்குதலின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்திய அரசின் உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய பாதுகாப்பின் ஒருங்கிணைந்த திட்டத்தில் ஒரு பகுதியாகவே இந்த பதிலடி தாக்குதல் இடம்பெற்றதாகவும், நாட்டின் எல்லைகள் மீதான எந்தவொரு அச்சுறுத்தலையும் தடுப்பதற்கும், தக்க பதிலடி கொடுப்பதற்கும், இந்தியா தயார் நிலையில் உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.