Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தர்மசாலா ஐ.பி.எல். போட்டி ரத்து: வீரர்கள், ஊழியர்களுக்காக சிறப்பு வந்தே பாரத் ரெயில் ஏற்பாடு!

இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற்று கோடறிந்த கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள், துணை ஊழியர்கள், ஒளிபரப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட 300 பேரை டெல்லி அழைத்து செல்ல சிறப்பு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (மே 8) இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெறவிருந்தது. தொடக்கத்தில் ஏற்பட்ட மழை காரணமாக டாஸ் தாமதம் ஆனது. பின்னர் மழை நின்றதும் டாஸ் போடப்பட்டு பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி திடீரென நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில், சில ஊடகங்களில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்கள் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.

மற்றொரு விளக்கம் அளித்த பிசிசிஐ, இந்த போட்டி மின் தடையால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணம் எனத் தெரிவித்தது. “மைதான மின்விளக்கு கோபுரங்களில் ஒன்று மின்தடை காரணமாக செயலிழந்தது. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்,” என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம், விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பிசிசிஐ இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் போக்கு வரத்து சிக்கல்கள் காரணமாக, ஐ.பி.எல். தொடரை தொடர வேண்டுமா, நிறுத்த வேண்டுமா? என்பதற்கான முக்கியமான அறிக்கை மற்றும் முடிவுகளை இன்று பிசிசிஐ ஆலோசித்து எடுக்கவுள்ளது.

இந்த சம்பவம் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், வீரர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பிசிசிஐ இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.