Saturday, August 15பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம்: கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’!

சத்தீஸ்கரில் மிகக் கனமழை முதல் அதிதீவிர கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்துள்ளது. மேலும், கங்கை சமவெளி சார்ந்த மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்குக் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், லடாக், கொங்கண், கோவா, மத்திய மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், இமயமலை அடிவாரப் பகுதிகளை ஒட்டிய மேற்கு வங்கம், சிக்கிம், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் இந்த மாதத்தின் 16-ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகாவின் உள் மற்றும் கடலோரப் பகுதிகள், விதர்பா, கேரளா மற்றும் மாஹே ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற வானிலை சூழல் லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, பீகார், குஜராத், உத்தரகண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.