Tuesday, June 16பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

‘அகத்தியர் – தி யூனிஃபையர்’ (Agatthiyar – The Unifier) ​​என்ற நூலை துணைக்குடியரசுத் தலைவர் வெளியிட்டார்

நாட்டின் ஒற்றுமை என்பது தற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல என்றும், அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முனிவர்கள் மற்றும் ஞானிகளால் வளர்க்கப்பட்ட ஒரு தொன்மையான நாகரிக யதார்த்தம் என்றும் துணைக்குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார். புது தில்லியில் உள்ள துணைக்குடியரசுத் தலைவர் இல்லத்தில் ‘அகத்தியர் – தி யூனிஃபையர்’ என்ற நூலை வெளியிட்டபோது பேசிய அவர், இந்நூல் முனிவர் அகத்தியரின் நீடித்த மரபையும், பல ஆயிரம் ஆண்டுகளாக பாரதத்தை ஒன்றிணைத்து வைத்திருக்கும் ஆழமான கலாச்சார ஒற்றுமையையும் எடுத்துரைப்பதாகக் குறிப்பிட்டார்.

பாரதத்தின் நாகரிக ஒற்றுமை குறித்துப் பேசிய திரு. ராதாகிருஷ்ணன், தேசிய ஒருமைப்பாடு குறித்த விவாதங்களில் மன்னர்களும் அரசியல் அமைப்புகளும் பெரும்பாலும் நினைவுகூரப்பட்டாலும், நாட்டின் ஒற்றுமையின் உண்மையான சிற்பிகள் முனிவர்களும் ரிஷிகளுமே என்று குறிப்பிட்டார். நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மீக ஒற்றுமையின் மிகச்சிறந்த அடையாளங்களில் ஒருவராக அகத்தியர் திகழ்கிறார் என்றும் அவர் கூறினார்.

இந்நூலை வெளியிட்டதற்காக ‘கலைமகள்’ இதழுக்குத் துணைக்குடியரசுத் தலைவர் பாராட்டுத் தெரிவித்தார். 95 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இவ்விதழ், தமிழ் இலக்கியம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். பல தமிழ் அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தேசியத் தலைவர்கள் தங்கள் எழுத்துக்களின் மூலம் இவ்விதழின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்தியிருப்பதை அவர் நினைவு கூர்ந்தார்.