Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி. வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வருகை!

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், தனது முதல் இந்திய அதிகாரப்பூர்வ பயணமாக பாலம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார், சம்பிரதாயபூர்வ அணிவகுப்பு மரியாதையைப் பெற்றார். ஏப்ரல் 21 முதல் 24ஆம் தேதி வரை உள்ள இந்த நான்கு நாள் பயணம் பயணம், இருநாட்டு உறவுகள், வணிகம் மற்றும் பிராந்திய அரசியல் போன்ற முக்கிய அம்சங்களை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது. இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

வான்ஸ் இந்தியா வருகை தொடர்பான பயண திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தில்லி, ஜெய்ப்பூர், மற்றும் ஆகிரா போன்ற வட இந்திய மாநிலங்களில் மட்டும் அவர் பயணிக்க உள்ளார். இதன் மூலம், தென் இந்தியா முழுமையாக விலக்கப்பட்டுள்ளது என்பதும் உறுதியாகியுள்ளது.

துணை அதிபரின் மனைவியான உஷா சிலுகுரி வான்ஸ், ஆந்திரப்பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 1970களில் அவருடைய பெற்றோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிட்டனர். கல்வியில் சாதனைபுரிந்த குடும்பத்தில் பிறந்த உஷாவின் தாத்தா ராம சாஸ்திரி சென்னை ஐஐடியில் பேராசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட தென்னிந்தியப் பின்னணியைக் கொண்ட உஷா வான்ஸ் குடும்பம் தென் மாநிலங்களுக்கு வரவில்லை என்பதும், இந்திய வரலாற்று மற்றும் பண்பாட்டுக் கண்மணிகளான தஞ்சாவூர், மதுரை, சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களை தவிர்த்துள்ளனர் என்பதும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த பயணத்தில் தென்னக பகுதிகள் சேர்க்கப்படாதது, நேரக் கட்டுப்பாடுகளா அல்லது திட்டமிட்ட அரசியல் தீர்மானமா? என்ற கேள்வி எழுகிறது. அமெரிக்க துணை அதிபரின் வருகை என்பது ஒரு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக இருக்கும்போது, தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் மற்றும் சமூக விமர்சனங்கள் உருவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வான்ஸ் இந்தியா வருகை தொடர்பான பயண திட்டம்:

ஏப்ரல் 21: வான்ஸ் குடும்பத்துடன் தில்லி வந்தடைந்து, பாரம்பரியமிக்க இடங்களை பார்வையிட்டு, பிரதமர் மோடியின் விருந்தில் கலந்துகொள்கிறார்.

ஏப்ரல் 22: ஜெய்ப்பூர் பயணம் செய்து, ராம்பாக் அரண்மனையில் தங்குகிறார்.

ஏப்ரல் 23: ஜெய்ப்பூரிலுள்ள புகழ்பெற்ற பாரம்பரிய இடங்களை பார்வையிட்டு, பின்னர் ராஜஸ்தான் சர்வதேச அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.

ஏப்ரல் 24: உலகில் மிகப் பிரசித்திபெற்ற சின்னமாக விளங்கும் தாஜ்மஹாலை பார்வையிட்டு, அதற்குப் பிறகு அமெரிக்காவுக்கு புறப்படுகிறார்.