Friday, June 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

அமெரிக்கா-கனடா எல்லையில் உயிரிழந்த இந்திய குடும்பம்; மனிதக் கடத்தல்காரருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை!

அமெரிக்கா-கனடா எல்லையை கடக்க முயன்ற போது பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த இந்திய குடும்பத்துடன் தொடர்புடைய மனிதக் கடத்தல் வழக்கில், பிரதான குற்றவாளியான ஹர்ஷ்குமார் படேலுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குடும்பம் குஜராத்தின் டிங்குச்சா கிராமத்தைச் சேர்ந்தது. 39 வயதான ஜகதீஷ் படேல், அவரது 30 வயது மனைவி வைஷாலிபென், 11 வயது மகள் விஹாங்கி மற்றும் 3 வயது மகன் தர்மிக் ஆகிய நால்வரும் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி கனடா-அமெரிக்க எல்லையில் உறைபனியில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் அப்போது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையில், அவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்ட முற்பட்ட போது மனிதக் கடத்தல்காரரிடம் மாட்டி உயிரிழந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், இந்தியாவைச் சேர்ந்த ஹர்ஷ்குமார் ராமன்லால் படேல் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, 10 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த தம்பதியினர் இருவரும் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் எனவும், சம்பவத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகளில் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.