Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி – ஒன்றிய அரசின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் புயல், பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு, மாநிலத்துக்கு ரூ.522.34 கோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதியுடன் விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மொத்தமாக, 2024-25 நிதியாண்டில் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) கீழ், மேலும் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதி (NDRF) கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியில், பீகார் ரூ.588.73 கோடி நிவாரணத் தொகையை பெற்றுள்ள நிலையில், அதன் பின்பே தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை வெளியிட்ட அறிக்கையில், “நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்ட மாநிலங்களுடன் தோளோடு தோளாக நிற்கின்றது. பேரழிவுகளுக்குப் பிறகு, எந்தவித தாமதமுமின்றி இடைக்கால மத்திய குழுக்களை அனுப்பி, நிவாரண நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 19 மாநிலங்களுக்கு ரூ.4984.25 கோடியும், தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 8 மாநிலங்களுக்கு ரூ.719.72 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.