
மதுரை மாவட்டத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த வழக்கில், இன்ஸ்பெக்டர் உட்பட நால்வருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவரின் மகன் (17), 2019 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி நகை திருட்டு தொடர்பாக எஸ்.எஸ். காலனி போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். விசாரணையின் போது உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தார். இந்த மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சிறுவனின் மரணத்திற்கான இழப்பீடு தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் முன்னதாக தீர்வு செய்திருந்தாலும், மரணத்திற்கு காரணமான போலீசாருக்கு எதிரான குற்றவியல் வழக்கு மதுரை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து வந்தது.
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, சம்பவம் நடந்த காலத்தில் எஸ்.எஸ். காலனி போலீசில் பணிபுரிந்த
- – இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜா,
- – சிறப்பு எஸ்.ஐ. ஆர். ரவிச்சந்திரன்,
- – ஏட்டு எஸ். ரவிச்சந்திரன்,
- – போலீஸ்காரர் சதீஷ்குமார்
என நால்வரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.
நீதிபதி ஜோசப் ஜாய் வழங்கிய உத்தரவின் படி:
- – சட்டவிரோதமாக தடுத்து வைத்தல் பிரிவின் கீழ் நால்வருக்கும் தலா 1 ஆண்டு சிறைத் தண்டனை
- – கொலையல்லாத மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை
- – மொத்தம் 11 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தண்டனைகளை ஒன்றின் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் ஆதாரங்களை அழித்த குற்றத்திற்காக அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த அருணாச்சலம், எஸ்.ஐ.க்களாக இருந்த கண்ணன், பிரேம்சந்திரன் மற்றும் தொடர்புடைய பிற நபர்களையும் கூடுதல் எதிரிகளாக சேர்த்து, சிபிசிஐடி போலீசார் உரிய நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதில் கண்ணன், பிரேம்சந்திரன் ஆகியோர் பணி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அருணாச்சலம் தற்போது பணியில் உள்ளார். அவரை விசாரணை முடியும் வரை டி.ஜி.பி. தற்காலிக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கை முதலில் விசாரித்த சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி, குற்றவாளிகளுக்கு சாதகமாக விசாரணை மேற்கொண்டதாக நீதிமன்றம் கண்டித்துள்ளது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க டி.ஜி.பிக்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
மேலும், சிறுவனின் உடலில் இருந்த காயங்களை மறைத்து, தவறான விபத்து பதிவேடு வழங்கிய டாக்டர் ஜெயக்குமார் மற்றும் பிரேத பரிசோதனை செய்யாமல் சட்டவிரோதமாக உடலை போலீசாரிடம் ஒப்படைத்த மருத்துவர் லதா மீது மருத்துவக் கல்வி இயக்குனர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.