Monday, January 5பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி அமெரிக்காவிற்கு கடுமையான செய்தியை அனுப்பியுள்ளது!

அமெரிக்கா வெனிசுலாவைத் தாக்கி, அதன் அதிபரை கைது செய்ததைத் தொடர்ந்து வட கொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி அமெரிக்காவிற்கு ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது.

வடகொரியாவின் சோசலிச கூட்டாளியான வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் நடவடிக்கை எடுத்து வரும் சூழ்நிலையில் இந்த ஏவுகணைச் ஏவுதல் நடத்தப்பட்டுள்ளது. வடகொரியா மற்றும் வெனிசுலாவும் பல தசாப்தங்களாகத் தங்கள் உறவை வலுப்படுத்தியுள்ளன. “வட அமெரிக்க ஏகாதிபத்தியம்” என்று இரு நாடுகளும் அழைக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், வெனிசுலா 2019-ல் வடகொரியாவின் பியோங்யாங்கில் தனது முதல் தூதரகத்தைத் திறந்தது. வட கொரியா 2014 முதல் வெனிசுலாவின் கராகஸில் ஒரு தூதரகத்தை நடத்தி வருகிறது.

தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் ஒரு உச்சிமாநாட்டிற்காக சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பின்னணியில் இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தென் கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் ஒரு அறிக்கையில், வட கொரியாவின் தலைநகர் பகுதியில் இருந்து காலை 7:50 மணியளவில் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதை தெரிவித்தனர். அந்த ஏவுகணைகள் வட கொரியாவின் கிழக்கு கடல் பகுதியை நோக்கி சுடப்பட்டதாகக் கூறிய அவர்கள், அவை எவ்வளவு தூரம் பயணித்தன என்பது போன்ற மேலதிக விவரங்களை வழங்கவில்லை. வட கொரியாவின் ஏவுகணைச் சோதனைகள் குறித்து அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் நெருக்கமாகத் தகவல்களைப் பரிமாறி வருவதாகவும், தங்களின் கண்காணிப்பு நிலையை வலுப்படுத்தியுள்ளதாகவும் கூட்டுப் படைத் தளபதிகள் தெரிவித்தனர். வட கொரியாவால் சந்தேகத்திற்கிடமான ஏவுகணைச் சோதனைகள் நடத்தப்பட்டதை தாங்களும் கண்டறிந்ததாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எந்தவித சேதங்கள் குறித்தும் உடனடியாகத் தகவல்கள் வெளியாகவில்லை.