வயநாடு மக்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில், பிலக்காவு வனப்பகுதிக்குள் விரைவு மீட்புக் குழுவினரால் ஏற்கனவே ஒரு பெண்ணை கொன்ற புலியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
வயநாட்டில் ஆட்கொல்லி புலியை உயிரோடவோ அல்லது சுட்டுக் கொன்று பிடிக்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் வனத்துறையினர் காட்டிற்குள் நுழைந்த போது புலி மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம் மானந்தவாடியைச் சேர்ந்த ராதா என்பவர் காபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது புலி தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்குப் பின்னர், அந்த புலியை உயிருடன் பிடிக்கவோ அல்லது சுட்டுக்கொல்லவோ மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
பஞ்சரக்கொல்லி பகுதியில், தலைமை வன கால்நடை அதிகாரி டாக்டர் அருண் சக்கரியாவின் தலைமையில் ஒரு சிறப்பு குழு முகாமிட்டது. புலி நடமாடுவதை கண்காணித்த சிறப்பு மீட்பு குழுவின் அதிகாரி ஜெயசூர்யா, புலியின் மீது மயக்க மருந்து ஊசி செலுத்த முயன்றார். இதன் போது, அவர் புலி தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
மானந்தவாடியில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கால்நடை மருத்துவர் டாக்டர் அருண் சக்கரியாவின் தலைமையில் 30 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் இன்று காலை வனத்துக்குள் நுழைந்து புலியை சுட முயற்சித்தனர். ஆனால் அப்போது எதிர்பாராத அதிர்ச்சி நிகழ்ந்தது.
ஆட்கொல்லி புலி மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்தது. பின்னர், வனத்துறையினர் புலியின் சடலத்தை மீட்டு, அதன் மரணத்தின் காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாநில அரசு, ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்வதற்கு முதல்முறையாக உத்தரவு பிறப்பித்த நிலையில், புலியின் மர்மமான மரணம் வனத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.