
சென்னையில் மொட்டை மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியத்தில் 20 வயதான முகுந்தன் என்பவர் உயிரிழந்துள்ளார். மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரான முகுந்தன் கடந்த வாரம் திங்கட்கிழமை திருமங்கலத்தில் உள்ள அவரது நண்பரின் வீட்டிற்குச் சென்று மொட்டை மாடியில் செல்போனில் பேசிக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கியதால் உயிரிழந்தார்.
2023-ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் மின்னல் தாக்கி 2,560 பேர் உயிரிழந்தனர். இயற்கை சீற்றங்களால் உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மின்னல் தாக்கினால் மிகக் கடுமையான காயங்கள் மற்றும் மரணம் ஏற்படலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) தெரிவிக்கிறது.
கடந்த மாதங்களில் மின்னல் தாக்கி ஏற்பட்ட உயிரிழப்புகள்:
ஆகஸ்ட் 23: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சகோதரிகளான அஸ்பியா பானு (13 வயது) மற்றும் சபிக்கா பானு (9 வயது) வெளியே சென்றுள்ளனர். அப்போது திடீரென மழை பெய்யவே மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளனர். அப்போது மின்னல் தாக்கி இருவரும் சம்பவம் இடத்திலே உயிரிழந்தனர்.
செப்டம்பர் 18: ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ரமேஷ் மழைக்கு மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
செப்டம்பர் 23: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த விவசாயி கொளஞ்சியம்மாள் என்பவர் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கவனிக்கச் சென்றபோது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரான ரமணன் கூறுகையில், “திறந்தவெளிகளில் தான் மின்னல் தாக்குதவதற்கான ஆபத்துகள் அதிகம் இருக்கிறது. கடலை ஒட்டிய பகுதிகளிலும் மின்னல் பாதிப்பு அதிகமாக இருக்கும். மின்னல்கள் 7000 டிகிரி வரை வெப்பத்தை உருவாக்கக்கூடும். மின்னல் மற்றும் மழை பெய்கிறபோது திறந்தவெளிகளில் இருக்கக்கூடாது. குறிப்பாக ஒற்றை மரத்தின் கீழ் நிற்கக்கூடாது. நிறைய மரங்கள் இருக்கும் இடங்களில் உயரமான மரங்களின் கீழ் நிற்கக்கூடாது. அதே போல ஈரமான சுவர்களின் மீது சாய்ந்து நிற்கக்கூடாது. ஈரம் மூலமாகவும் மின்சாரம் கடத்தப்படுவதற்கு வாய்ப்புண்டு. அதே வேளையில் வீடுகளில் இருக்கிறபோதும் மின்னல் தாக்கும் வாய்ப்பு இருப்பதால் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்” என்கிறார்.
மின்னல்கள் தாக்குவது நான்கு விதங்களில் நடக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
- நேரடியாக ஒருவர் மீது மின்னல் தாக்குவது
- மரம் அல்லது ஒரு சுவர் மீது மின்னல்பட்டு அருகில் இருப்பவரை தாக்குவது
- மின்னல் தாக்கிய இடத்திலிருந்து நிலத்தின் வழியாக அருகில் இருப்பவர்களை பாதிப்பது.
- மின்னல் தாக்கிய இடத்தில் உலோகங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பாதிப்பது
இடி மற்றும் மின்னல் ஏற்படுகிறபோது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களையும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.எம்.டி.ஏ) வழங்கியுள்ளது.
வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
- மொட்டை மாடி மற்றும் பால்கனிக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- கதவுகள் மற்றும் ஜன்னல்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்
- லேண்ட்லைன் அலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது.
- சார்ஜிங்கில் இல்லாத திறன்பேசி, டேப்லட் போன்ற மின்னணு சாதனங்களை வீடுகளில் பயன்படுத்தலாம்.
வெளியில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
- முழுவதுமாக மூடப்பட்ட கட்டடங்கள் அல்லது காருக்குள் செல்ல வேண்டும்
- திறந்தவெளி வாகனங்களில் இருக்கக்கூடாது
- தகரத்தால் ஆன கூடாரங்கள், திறந்தவெளி வாகன நிறுத்தம், கட்டுமானத்தின் கீழ் உள்ள கட்டிடங்கள் ஆகிய இடங்களை தவிர்க்க வேண்டும்
- நீர்நிலைகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.
மின்னல் தாக்கியவர்களுக்கு வழங்க வேண்டிய முதலுதவிகளையும் என்.டி.எம்.ஏ பட்டியலிட்டுள்ளது. அவை,
- மின்னல் தாக்கியவருக்கு மூச்சு இல்லையென்றால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் அவசர உதவி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவருக்கு சி.பி.ஆர் வழங்க வேண்டும்.
- மின்னல் தாக்கியவருக்கு நினைவிருந்தால், அவரை தரையில் படுக்க வைத்து காலை உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.