
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கும் உக்ரைன்–ரஷ்யா போர் குறித்து, போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து முக்கியமான நேரடி பேச்சுவார்த்தை இன்று (மே 15) துருக்கியில் நடைபெறவுள்ளது. திடீர் திருப்பமாக டிரம்பும், புடினும் நேரில் பங்கேற்கவில்லை என்று அறியப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு புடின் தனது பிரதிநிதிகளை அனுப்புவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜெலன்ஸ்கி தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில், “ரஷ்யாவிலிருந்து யார் வருகிறார்கள் என்பதை கண்ட பிறகு நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும், “துருக்கியில் நடைபெறும் இந்த சந்திப்பில் டிரம்ப் பங்கேற்கும் வாய்ப்பைப் பற்றி நான் கேட்டுள்ளேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெலன்ஸ்கி மேலும், “ரஷ்யா தொடர்ந்து போரை நீட்டிக்கிறது, மக்கள் உயிரிழப்பை நிறுத்த அமைதி தேவைப்படுகிறது. போரை நிறுத்த ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் நன்றி. அமைதிக்காக செயல்படுபவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி,” என தெரிவித்துள்ளார்.
இது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெறும் முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை எனக் கருதப்படுகிறது. டிரம்பும், புடினும் நேரில் பங்கேற்கவில்லை என்றாலும், தங்களின் அனுபவமுள்ள அதிகாரிகள் குழுவை அனுப்பியுள்ளனர்.
ஜெலன்ஸ்கி, 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், புடின் அதை தொடங்குவதற்கு முன் விவாதிக்க வேண்டியதாகக் கூறியுள்ளார். ஒரு பெரிய போர் கைதி பரிமாற்றம் பற்றிய விவாதங்கள் கூட இந்தச் சந்திப்பில் இடம்பெறலாம் என ஒரு ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜெலன்ஸ்கி தனது இரவு உரையில் கூறியதாவது: “இந்தப் போர் எதனால் துவங்கியது, ஏன் தொடர்கிறது என்பதைப் பற்றிய எல்லா பதில்களும் மாஸ்கோவில்தான் உள்ளன. இந்தப் போரை முடிக்க உலக நாடுகளின் தீர்மானம் முக்கியமானது” எனக் கூறினார்.
உலகம் இன்று துருக்கியை நோக்கி திரும்பி உள்ளது – இந்த அமைதி பேச்சுவார்த்தை ஒரு முக்கிய கட்டமாக மாறுமா? என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.