Saturday, March 28பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இந்தியா மற்றும் துனிசியா, துனிஸில் வெளியுறவு அலுவலக ஆலோசனைகளின் 6-வது சுற்றை நடத்தின.

இந்தியா மற்றும் துனிசியா ஆகிய நாடுகள், முக்கியத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன், இன்று துனிஸ் நகரில் தங்களின் 6-வது சுற்று வெளியுறவு அலுவலக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தின.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், சமூக ஊடகப் பதிவுகள் வாயிலாகத் தெரிவித்ததாவது: இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, வெளியுறவு அமைச்சகத்தின் ‘தெற்கு’ பிரிவுச் செயலாளர் டாக்டர் நீனா மல்ஹோத்ரா மற்றும் துனிசியாவின் வெளியுறவுச் செயலாளர் முகமது பென் ஆயத் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். அரசியல் ஈடுபாடு, உயர்மட்டப் பயணங்கள், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, கலாச்சாரப் பரிமாற்றங்கள் மற்றும் மக்கள்-மக்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் முழுமையான பரிமாணங்களையும் இரு தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்ததாக திரு. ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.

முன்னதாக, டாக்டர் நீனா மல்ஹோத்ரா துனிசியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது அலி நாஃப்டியைச் சந்தித்துப் பேசியதாக திரு. ஜெய்ஸ்வால் தெரிவித்தார். அச்சந்திப்பின் போது, ​​கல்விசார் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளிலும், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் அவசியத்தை திரு. நாஃப்டி வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும் வலுப்படுத்தவும் இரு நாடுகளும் கொண்டுள்ள பொதுவான உறுதிப்பாட்டை, இச்சந்திப்பின் போது நடைபெற்ற விவாதங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியதாக திரு. ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.