Saturday, January 18பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

விவசாயிகள் இன்று மீண்டும் ‘டெல்லி சலோ’ அணிவகுப்பை தொடங்குகின்றனர் – ஷம்பு எல்லையில் தடுப்புகள்!

ஷம்பு எல்லையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சாலைகளில் ஆணிகள் பொருத்தப்பட்டு, வாகனங்கள் கடக்க முடியாதபடி நிலைமை ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஹரியானா மற்றும் பஞ்சாப் இடையேயான ஷம்பு எல்லையில் டெல்லியை நோக்கிச் செல்வதைத் தடுத்து நிறுத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் ‘டில்லி சலோ’ அணிவகுப்பை மீண்டும் தொடங்குகிறார்கள்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராத) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய இரண்டும் இணைந்து 101 விவசாயிகள் கொண்ட குழு இன்று மதியம் அமைதியான முறையில் டெல்லிக்கு அணிவகுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் விவசாயி தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை என்றும் திரு பாந்தர் மறுத்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. பேச்சுவார்த்தை நடத்தும் மனநிலையில் அரசு இல்லை” என்றார்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2013-ஐ மீண்டும் நடைமுறைப்படுத்துவதோடு, விவசாயிகள் மீதான போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெறவும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு “நீதி” வழங்கவும் அவர்கள் கோருகின்றனர்.