
விவசாயிகள் தனிப்பட்ட அடையாள எண்ணைப் பெற, உரிய ஆவணங்களை மார்ச் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் எண்ணைப் போல தனி அடையாள எண் வழங்கப்படுகிறது. இதற்காக, நில விவரங்கள், பயிர் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையின் படி, விவசாயிகளின் விபரங்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக, அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி விவசாயிகள் பதிவு செய்தால், அவர்களுக்கு தனி அடையாள எண் வழங்கப்படும். இந்த அடையாள எண்ணைப் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே, எதிர்காலத்தில் மத்திய அரசு வழங்கும் மானிய உதவிகள், பிரதமர் விவசாய உதவித்தொகை, பயிர் கடன், கிஸான் கிரெடிட் கார்டு போன்ற நிவாரணங்கள் கிடைக்கும். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், தமிழக வேளாண் துறைக்கு மத்திய அரசிலிருந்து ₹1,200 கோடி நிதி கிடைக்கும்.
அதனால், மார்ச் 31க்குள் விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்து, தனி அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இதை செய்யத் தவறினால், ஏப்ரல் முதல் மானிய உதவிகள், கடன் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.