
வட கொரியா மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்கள், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றங்களை மேம்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளனர். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்று பியோங்யாங்கிற்குப் பயணம் மேற்கொண்டார். இது, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வட கொரியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும். இந்தப் பயணத்தின்போது, அவர் தனது வட கொரிய வெளியுறவு அமைச்சர் சோய் சோன் ஹுயியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீனாவின் அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, தற்போதைய சர்வதேச மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் ஆழமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர், இருப்பினும் குறிப்பிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. வட கொரியாவின் கொரிய மத்திய செய்தி நிறுவனம், இரு தலைவர்களும் தங்களது வெளியுறவுக் கொள்கை நிறுவனங்களுக்கு இடையிலான மூலோபாயத் தொடர்புகளை வலுப்படுத்தவும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான ஒத்திவைக்கப்பட்ட உச்சி மாநாட்டிற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் பெய்ஜிங்கிற்கு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணத்திற்கு முன்னதாக இந்தப் பயணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
