சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கில் (82) மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பிற்காக ஆற்றிய குறிப்பிடத்தக்க சேவையினால், ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய சுற்றுச்சூழல் விருதான சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டிற்கான விருது பெறுபவர்களின் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியராக மாதவ் காட்கில் இருக்கிறார். அவர் இந்திய அரசால் அமைக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழுவின் தலைவராக இருந்தார். அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
விருதைப் பற்றி கருத்து தெரிவிக்கும் மாதவ் காட்கில் கூறியதாவது:
“சரியானவற்றிற்காக உறுதியாக நின்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு தயாரித்த அறிக்கை நேர்மையான மற்றும் தெளிவான கருத்துக்களால் நிரம்பியுள்ளது. இது மக்களுக்குப் புரிந்துகொள்ளும் வகையில் உள்ள ஒரு ஆவணமாகும். அந்த அறிக்கை மூலம் சில நல்ல மற்றும் நேர்மையான விவாதங்கள் உருவாகியிருக்கிறது. யாரும் முன்பு செய்யாத இதுபோன்ற ஒரு அறிக்கையை எழுதுவதில் நான் பெருமைபடுகிறேன்.”
இந்த அறிக்கை மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்கும் தேவையை மக்களிடத்தில் விழிப்புணர்வாக ஏற்படுத்தியதைக் குறிப்பிடுகையில், “இதில் ஒரு சிறிய, ஆனால் கண்ணியமான பங்கை நான் வகித்தேன் என்று நம்புகிறேன்,” என அவர் தெரிவித்தார்.