
பாரிஸில் நடைபெற்ற விவாடெக் 2026 நிகழ்வில், இந்திய அரங்கின் தொடக்க விழாவில், புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான தங்களது உறுதிப்பாட்டை இந்தியாவும் பிரான்சும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரான்சின் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் விவகாரங்களுக்கான அமைச்சர் ஆன் லெ ஹெனான்ஃப் ஆகியோர், இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் மூலோபாய கூட்டாண்மையை எடுத்துரைத்தனர்.
புத்தாக்க உருவாக்குநர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களிடம் உரையாற்றிய பியூஷ் கோயல், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோரால் அறிவிக்கப்பட்ட இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026 மூலம் இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். செயற்கை நுண்ணறிவு சகாப்தத்திற்குத் தேவையான முக்கிய நன்மைகளை இந்தியா வழங்குகிறது என்றும், அவற்றுள் இளம் மக்கள் தொகை, STEM பட்டதாரிகளின் பெரும் எண்ணிக்கை, வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் ஜனநாயக ஆட்சிமுறை ஆகியவை அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மானவ்” என்ற கருத்தின் மூலம் மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், நெறிமுறை சார்ந்த, பொறுப்புக்கூறக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவை அவர் வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவுத் திறமையாளர்கள், தரவு மையங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய மையமாக மாற இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். பிரெஞ்சு அமைச்சர் ஆன் லெ ஹெனான்ஃப், இந்தியாவை ஒரு உலகளாவிய புத்தாக்க சக்தி மையம் என்று வர்ணித்ததோடு, விவாடெக் 2026-ல் செயற்கை நுண்ணறிவுக்கான நாட்டுப் பங்காளராக அதன் பங்களிப்பை வரவேற்றார்.
பொறுப்பான செயற்கை நுண்ணறிவில் இந்தியாவின் தொழில்நுட்பச் சாதனைகளும் தலைமைத்துவமும், தொழில்நுட்பம் மனிதகுலத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கின்றன என்று அவர் கூறினார். பிராங்கோ-இந்திய புத்தாக்க ஆண்டை முன்னிலைப்படுத்திய அவர், புத்தொழில் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
புத்தாக்கம், பொறுப்பு மற்றும் செயல்பாடு ஆகிய பொதுவான இலக்குகளை பிரான்சும் இந்தியாவும் பகிர்ந்து கொள்கின்றன என்றும், நம்பகமான செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மீள்திறன் மற்றும் நிலையான தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக இணைந்து செயல்படுகின்றன என்றும் ஆன் லெ ஹெனான்ஃப் கூறினார். விவாடெக் 2026-ல் உள்ள மிகப்பெரிய தேசிய அரங்குகளில் ஒன்றான இந்திய அரங்கு, நாட்டின் வளர்ந்து வரும் புத்தொழில் மற்றும் புத்தாக்கச் சூழலமைப்பைக் காட்சிப்படுத்துகிறது.
