
பிரதமர் நரேந்திர மோடி இன்று, பீட்டர் மாக்யார் மற்றும் திஸா கட்சி ஆகியவை ஹங்கேரி தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். சமூக ஊடகப் பதிவு ஒன்றில், இந்தியாவும் ஹங்கேரியும் ஆழமான நட்புறவு, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் நீடித்த பரஸ்பர மரியாதை ஆகியவற்றால் பிணைக்கப்பட்டுள்ளதாக திரு. மோடி குறிப்பிட்டார்.
இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளின் மக்களின் பகிரப்பட்ட செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக, இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த உத்திசார் கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்லவும், பீட்டர் மாக்யாருடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி அடைந்த தோல்வியை, ஹங்கேரியப் பிரதமரும் ஃபிடெஸ் (Fidesz) கட்சியின் தலைவருமான விக்டர் ஆர்பன் ஏற்றுக்கொண்டார். இதன் மூலம், அவர் 16 ஆண்டுகளாக வகித்து வந்த ஆட்சி நிறைவுக்கு வருகிறது.
80 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பீட்டர் மாக்யாரின் கட்சி நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய பெரும்பான்மையைப் பெறும் பாதையில் பயணித்து வருவதால், அவரே அந்நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) நெருக்கமான உறவுகளை வளர்ப்பதாகவும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் திரு. மாக்யார் உறுதியளித்திருந்தார்.
