
தமிழகத்தில் நிலம், வீடு, மனை உள்ளிட்ட அசைவு இல்லா சொத்துகளை வாங்குபவர்கள், பத்திரப்பதிவுடன் சேர்த்து பட்டா மாறுதலுக்கும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, பட்டா மாறுதல் மற்றும் சொத்து உரிமை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வருவாய் துறை முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், விற்பனை பத்திர எண், சொத்தின் நான்கு எல்லைகள் தொடர்பான விபரங்கள், உரிமையாளரின் ஆதார் எண் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை பட்டாவில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப பணிகள் தற்போது துவங்கியுள்ளன.
தற்போது வழங்கப்படும் பட்டாவில் மாவட்டம், தாலுகா, கிராமம், நில உரிமையாளர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், நிலத்தின் சர்வே எண், உட்பிரிவு எண், பரப்பளவு மற்றும் நில வகைப்பாடு போன்ற அடிப்படை விபரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்த பட்டா வடிவமைப்பு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதே ஆகும். பல ஆண்டுகள் கடந்தும் அதே வடிவமைப்பிலேயே பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைய சூழலில், நிலம் மற்றும் வீடு தொடர்பான பரிமாற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த அடிப்படை விபரங்கள் மட்டும் போதுமானதாக இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது. இதனால், சொத்து உரிமை தொடர்பான சரிபார்ப்புகளில் குழப்பங்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர் பி. விஸ்வநாதன் கூறுகையில், “முந்தைய காலங்களில் பட்டா பெற்ற நபர், அந்த சொத்தை அடிக்கடி விற்பது அரிதாக இருந்தது. ஆனால் தற்போது நிலங்கள் தொடர்பான அடுத்தடுத்த பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளன. பட்டாவில் உள்ள விபரங்களையும் பத்திரத்தில் உள்ள விபரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது பல்வேறு முரண்பாடுகள் மற்றும் சந்தேகங்கள் எழுகின்றன. இதை தவிர்க்க, பட்டாவின் வடிவமைப்பை மாற்றி, அதில் பத்திர எண், சொத்தின் நான்கு எல்லைகள் மற்றும் உரிமையாளரின் ஆதார் எண் போன்ற முக்கிய விபரங்களை சேர்ப்பது அவசியம்,” என தெரிவித்தார்.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சொத்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பட்டாவின் தற்போதைய வடிவமைப்பை மாற்றி, கூடுதல் மற்றும் முக்கிய விபரங்களை சேர்க்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை துவங்க, நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான நடைமுறை செயல்படுத்தப்படும்,” என்று தெரிவித்தார்.
இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், சொத்து வாங்கும் மற்றும் விற்கும் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும், பட்டா–பத்திரம் தொடர்பான குழப்பங்கள் குறையும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
