Monday, October 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச சிறுபான்மையினருக்கு ஆவணங்கள் இன்றி இந்தியாவில் தங்க அனுமதி.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இந்தியா வந்த சிறுபான்மையினருக்கு, ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்க அனுமதி வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்து, பவுத்தர், சீக்கியர், சமணர், பார்சிக்கள், கிறிஸ்துவர் உள்ளிட்ட சமூகத்தினர் அண்டை நாடுகளில் சிறுபான்மையினராகக் கருதப்படுகின்றனர். அங்கு அடிக்கடி தாக்குதல்கள், மத அடக்குமுறைகள் காரணமாக இவர்களில் பலர் அகதிகளாக இந்தியாவை நாடி வருகின்றனர்.

இவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நோக்கத்துடன் 2019ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நிறைவேற்றியது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் கடந்தாண்டு மார்ச் மாதம் இச்சட்டம் அமலுக்கு வந்தது.

அந்த சட்டத்தின் படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31க்குள் இந்தியா வந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு, பாஸ்போர்ட் உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் இல்லாவிட்டாலும் குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ‘குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025’ ன் படி சி.ஏ.ஏ-வில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ‘2024 டிசம்பர் 31 வரை’ இந்தியாவுக்கு வந்த ஹிந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆவணங்கள் இன்றி இந்தியாவில் தொடர்ந்து வசிக்கும் உரிமை வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால், இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அண்டை நாடுகளின் ஆயிரக்கணக்கான சிறுபான்மையினருக்கு எதிர்காலத்தில் குடியுரிமை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.